தினமலர் 18.05.2010
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாளை முதல் டிஜிட்டல் போர்டு அகற்றம்
தூத்துக்குடி, : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் இரண்டு நாட்கள் அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் போர்டுகள் முழுமையாக அகற்றப்படும் என்றும், தூத்துக்குடி ஊராட்சி பகுதியில் இன்று டிஜிட்டல் போர்டுகள் கலெக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து நேற்று மாலை அவர் வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில் கூறியிருப்பதாவது;தூத்துக்குடி தாலுகா, மாநகராட்சி பகுதிகள், ஊராட்சி பகுதிகளில் பேனர்கள், டிஜிட்டல் போர்டுகள், விளம்பர போர்டுகள் அனுமதியின்றி வைத்து இருப்பதால் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. அதனை தவிர்கும் நோக்குடன் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர போர்டுகள், டிஜிட்டல் போர்டுகள் போன்றவற்றை நாளை நாளை மறுநாள் ஆகிய நாட்களில் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் அகற்றப்பட உள்ளது.தூத்துக்குடி நகர்புறம் மற்றும் ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை மற்றும் டிஜிட்டல் போர்டுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை மூலம் அகற்றப்படுவதுடன், அதற்கான செலவு தொகையும் விளம்பரம் வைத்திருப்பவர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் உரிய அனுமதி பெற்று பேனர்கள் மற்றும் போர்டுகள் வைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.