தினகரன் 18.05.2010
அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
தூத்துக்குடி, மே 18: தூத்துக்குடியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள் நாளை முதல் அகற்றப்படும் என்று கலெக்டர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகரில் அனுமதிக்கப்படாத இடங்களிலும் விளம்பர பலகைகள், டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பழைய பஸ் நிலையம், காய்கனி மார்க்கெட், பாளைரோடு உள்ளிட்ட இடங்களில் திரும்பிய பக்கமெல்லாம் டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வாகனங்களில் செல் வோர் விபத்தில் சிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. போக்குவரத்து, மாநகர விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள போர்டுகளை அகற்ற வேண்டும் என்று நடுநிலையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தூத்துக்குடி கலெக்டர் பிரகாஷ் அனுமதிக்கப்படாத இடங்களில் வைக்கப்பட் டுள்ள அனைத்து விளம்பர போர்டுகளை யும் நாளை (19ம் தேதி) முதல் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாநகரம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள், விளம்பர பலகைகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அதனை தவிர்க்க மாநகராட்சி பகுதிகளிலும், ஒன்றிய பகுதிகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள், விளம்பர போர்டுகளை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும்.
இல்லையேல் நாளை முதல் மாநகராட்சி அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோர் இந்த போர்டுகளை அகற்றுவார்கள். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி டிஜிட்டல் போர்டுகள் வைப்பவர்கள் அதில் மாநகராட்சி வழங்கிய அனுமதி எண் மற்றும் அனுமதி நாள் ஆகியவற்றை குறிப்பிட்டே வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.