தினமலர் 20.05.2010
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இடையூறு டிஜிட்டல் போர்டுகள் அகற்றம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நேற்று போக்குவரத்திற்கு இடையூறாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்பட்டது. இன்றும் இந்த அதிரடி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலும், யூனியன் பகுதியிலும் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டும், மாநகராட்சி மற்றும் யூனியனில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் போர்டுகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் (பொ) ராஜகோபாலன் அறிவுரையின் பேரில் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி (பொ) ராமச்சந்திரன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர்கள் காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் குத்தாலிங்கம் மற்றும் மாநகராட்சி சுகாதாரபிரிவினர் போலீசார் பாதுகாப்புடன் டிஜிட்டல் போர்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் துவங்கிய டிஜிட்டல் போர்டு அகற்றும் பணி பீச் ரோடு வரை நடந்தது. நேற்று மதியம் 3 மணி வரை மொத்தம் அனுமதி பெறாமல், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள 50 போர்டுகள் வரை அகற்றப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அகற்றப்பட்ட டிஜிட்டல் போர்டுகள் மாநகராட்சி லாரியில் அள்ளி எடுத்து செல்லப்பட்டன. நேற்று மாலை வரை இந்த பணிகள் நடந்தது. இன்றும் டிஜிட்டல் போர்டுகள் அகற்றும் பணி தொடர்கிறது.