Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றம்

Print PDF

தினமணி     20.05.2010

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றம்

தூத்துக்குடி, மே 19: தூத்துக்குடி நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர்.

தூத்துக்குடி நகர்புறம் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பேனர்கள், விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் அனுமதியின்றி வைத்திருப்பதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கும் நோக்குடன் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பரப் பலகைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டார்.

அதன்பேரில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்களை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை தொடங்கினர்.

தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியிலிருந்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் வரை பாளையங்கோட்டை சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், பேனர்களை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினர். முதல் நாளில் 50 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

மாநகராட்சி நகர் அமைப்பு அலுவலர் (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன், நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர் ஆகியோர் இந்த விளம்பர பலகை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 2-வது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்து விளம்பரப் பலகைகள், பேனர்கள் அகற்றப்படும்.