தினகரன் 20.05.2010
தூத்துக்குடியில் ஆக்ரமிப்பு போர்டுகள் அகற்றம்
தூத்துக்குடி, மே 20: தூத்துக்குடியில் ஆக்ரமித்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட போர்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
தூத்துக்குடியில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையான அனுமதி பெற்ற பின்னரே போர்டுகளை வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாத போர்டுகள், டிஜிட்டல் பேனர்கள்களை அகற்றவேண்டும் என மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து மாநகராட்சி பொறுப்பு நகரமைப்பு அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர்கள் ஆறுமுகம், காந்திமதி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்ரமிப்புகளை அகற்றினர்.
தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் இருந்து பாளை ரோடு, மார்க்கெட், பழைய பஸ்நிலையம், டபிள்யூஜிசிரோடு, ஜி.சி ரோடு ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட போர்டுகளை ஜேசிபி உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்படும் போர்டுகள் மற்றும் ஆக்ரமிப்புகள் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.