தினகரன் 21.05.2010
தங்க சாலையில் பரபரப்பு அனுமதியின்றி கட்டப்பட்ட 40 கடைகள் தரைமட்டம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
தண்டையார்பேட்டை, மே 21: தங்கசாலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 40 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.
ஏழுகிணறு தங்கசாலை தெருவில் 200க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் வரைமுறையின்றி இருந்தன. இதனால், பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இதில், உயர் நீதிமன்றமும், மாநகராட்சியும் தலையிட்டு, நடைபாதை வியாபாரிகள் தற்காலிக கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியது.
இந்நிலையில், அப்பகுதி நடைபாதை வியாபாரிகள் பலரும் தற்காலிக கடைகளை அமைக்காமல், சுவர் எழுப்பி நிரந்தர கடைகளைப் போல கட்டினர். இதற்கு மாநகராட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் சுமார் 40 கடைகள் கட்டி முடிக்கப்பட்டன. மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து கடைகள் கட்டும் பணியும் நடந்து வந்தது.
இதனால், அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரங்களுடன் தங்கசாலை பகுதிக்கு நேற்று வந்தனர். கடைகளை இடிக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த ஏழுகிணறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
வியாபாரிகளிடம் சமரசம் பேசி அமைதிபடுத்தினர். பின்னர், அனுமதியின்றி கட்டப்பட்ட 40 கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.