தினகரன் 26.05.2010
பட்டுக்கோட்டையில் பிளக்ஸ், விளம்பர போர்டுகள் அகற்றம்
பட்டுக்கோட்டை,மே.26: பட்டுக்கோட்டையில் 110 விளம்பர போர்டுகள், பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன.
பட்டுக்கோட்டையில் நகராட்சிப் பகுதிகளில் விளம்பரம் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது தொடர்பாக 22ம் தேதி கலெக்டர் சண்முகம் திடீர் ஆய்வு செய்தார். நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள போர்டுகளை 24&ம் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 25&ம் தேதி அவை அகற்றப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி நேற்று நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரால் காலை முதல் மாலை வரை விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டன. பஸ் நிலையப் பகுதி, மணிக்கூண்டு, அறந்தாங்கிரோடு முக்கம், அண்ணாசிலை பகுதி, பாளையம், ஆலடிக்குமுளை மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் அனுமதியற்ற, காலங்கடந்த விளம்பர போர்டு மற்றும் பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன. இதில் பெரிய விளம்பர போர்டுகள் 10, சிறிய பிளக்ஸ் போர்டுகள் 43, போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 57 பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன.