தினமலர் 03.06.2010
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற வேண்டுகோள்
தர்மபுரி: தர்மபுரி நகரின் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி நகரப்பகுதியில் போக்குவரத்துக்கு ஏற்ற சாலை கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், வாகனங்களில் எண்ணிக்கை, மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் நெரிசல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. நகரின் முக்கிய சாலைகளில் கழிவு நீர் சாக்கடை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து பலர் தங்களில் கடைகளில் நுழைவு பகுதியை அமைத்திருப்பதோடு, சிலர் பொதுமக்கள் பார்வைக்கு கடையில் உள்ள பொருட்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியில் வைத்து வருகின்றனர். குறிப்பாக தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றியுள்ள ஆறுமுக ஆச்சாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, திருப்பத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கடைகளின் முன் பகுதி சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில் சிமென்ட் சிலாப் போட்டு மூடி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சாக்கடை கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் பல இடங்களில் தேங்கியுள்ளது. சிறு மழை பெய்தால் கூட மழை நீர் கால்வாய்களில் செல்ல முடியாத அளவுக்கு சாக்கடை கால்வாய்களில் அடைக்கப்பட்டு, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கால்வாய்களில் அடைப்பால் சாலைகளில் நீர் தேங்குவதோடு, சாக்கடை கழிவுகளும் மழை நீருடன் பெருக்கெடுத்து ஓடி துர் நாற்றத்தை பரப்பி வருகிறது. மழை பெய்தால், இந்த சாலைகளில் மக்கள் நடந்து செல்ல அருவருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் வரும் பருவ மழைக்கு முன் பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றி சாக்கடை கால்வாயை ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை காலங்களில் மழைநீர் கால்வாய்களில் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.