தினகரன் 07.06.2010
பீர்க்கன்காரணை பேரூராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
தாம்பரம், ஜூன் 7: பீர்க்கன்காரணை பேரூராட்சியில், மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.21.20 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்துக்கு, கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க 20 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் பணி துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலத்தை மீட்டு தடும்படி, பேரூராட்சி சார்பில் தாம்பரம் தாலுகா அலுவலகத்துக்கு மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தாம்பரம் வருவாய் ஆய்வாளர் தலைமையிலும், பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் சிவசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இடத்துக்கு சென்றனர். ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை மீட்டனர். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 லட்சம். நிலம் மீட்கப்பட்டதால், பாதாள சாக்கடை பணிகள் விரைவில் தொடங்கும் என பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.