தினமணி 08.06.2010
சாலையோர கோயில்களை அகற்றிய மாநகராட்சியினர்
திருச்சி, ஜூன் 7: திருச்சி மேலரண் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 3 கோயில்களை மாநகராட்சி அலுவலர்கள் திங்கள்கிழமை அகற்றினர்.
திருச்சி மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்துச் சாலைகளும் மேம்படுத்தப்படவுள்ளன. இதற்கிடையே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில், மேலரண் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மூக்காரப் பிள்ளையார் கோயில், ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் மற்றும் தனியார் நிர்வாகத்திலுள்ள வீரராஜ்ய பிள்ளையார் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் இடித்து அகற்றப்பட்டன.
இந்தப் பணியில் மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், குமரேசன் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் ஈடுபட்டனர். 4 பொக்லைன்கள் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட்டன. பாதுகாப்புப் பணியில் மாநகர துணை ஆணையர் ரூபேஷ்குமார் மீனா தலைமையில் ஏராளமான போலீஸôர் ஈடுபட்டிருந்தனர். மாநகரிலுள்ள அனைத்துச் சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.