தினகரன் 08.06.2010
மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்
புதுடெல்லி, ஜூன் 8: டெல்லியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கே.எஸ். மெஹ்ரா கூறினார்.
இதுபற்றி நிருபர்களிடம் மெஹ்ரா கூறியதாவது: டெல்லியில் அக்டோபர் 3 முதல் 14 ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. அதற்காக நகரை அழகுபடுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. சாலையோரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த கடைகள் நகரின் பாதுகாப்புக்கு நல்லது அல்ல.
போட்டியின்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் நகரில் கூடுவார்கள். அப்போது போக்குவரத்துக்கும் இவைகள் இடையூறாக இருக்கும். எனவே சாலைகளில் உள்ள காய்கறி கடைகள், காலணி பழுதுபார்க்கும் கடைகள், துணிகளுக்கு இஸ்திரி போடும் கடைகள் மற்றும் பான்வாலாக்கள் வைத்துள்ள கடைகள் எல்லாவற்றையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மெஹ்ரா கூறினார்.