தினகரன் 08.06.2010
போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கோயில்கள் இடிப்பு
திருச்சி, ஜூன் 8:ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றப்பட்டன. தெப்பக்குளம் கோட்டை வாசல் முதல் காந்தி மார்க்கெட் வரையிலான ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது. அப்போது இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட இப்ராஹீம் பார்க் அருகில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில், மேலப்புலிவார்டு ரோடு பகுதியில் உள்ள மூக்கரையர் விநாயகர் கோயில் மற்றும் வீரராஜ்ய விநாயகர் கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். கோயில்களை இடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநகர செயலாளர் பார்த்தீபன், கோட்ட பொறுப்பாளர் திருமலை உள்பட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்னர். கோயில்கள் இடிக்கப்பட்ட பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். கோயிலில் இருந்த சாமிசிலைகள், உண்டியல் மற்றும் நகை வைக்கும் பெட்டகங்களுக்கு சீல் வைத்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இதே போல் மாநகராட்சி பகுதியில் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விரைவில் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.