தினமலர் 11.06.2010
தூத்துக்குடியில் போக்குவரத்திற்கு இடையூறு 18 டிஜிட்டல் போர்டுகள் ஜெசிபி மூலம் அகற்றம்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று அனுமதி இல்லாமல் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டுகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டன. மொத்தம் 18 போர்டுகள் ஜெ.சி.பி உதவியுடன் எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் போக்குவரத்து இடையூறாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகளை அகற்றி கொண்டே இருந்தால் தான் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என்று கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்துநேற்று கமிஷனர் குபேந்திரன் உத்தரவின் பேரில் நகரமைப்பு அதிகாரி (பொ) ராமச்சந்திரன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர்கள் காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன் மற்றும் நகரமைப்பு ஊழியர்கள், சுகாதார பிரிவு ஊழியர்கள் இணைந்து ஜெ.சி.பி உதவியுடன் பாளை.ரோடு, கிரேட்காட்டன் ரோடு, டபுள்யூ சி.ஜி.ரோடு ஆகிய இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டுகளை அகற்றினர்.
சில நாட்களாக தொடர்ந்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் போர்டு, கமர்சியல் டிஜிட்டல் போர்டு உள்ளிட்ட மொத்தம் 18 டிஜிட்டல் போர்டுகளை அகற்றினர். ஜெ.சி.பி மூலம் அப்படியே அலாக்காக பிடுங்கப்பட்ட போர்டுகள் மாநகராட்சி லாரியில் கொண்டு செல்லப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் போடப்பட்டது.