தினமலர் 15.06.2010
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிரடியாக அகற்றம்
கொரட்டூர் : குளம், மயான புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை அம்பத்தூர் நகராட்சி அதிகாரிகள், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக அகற்றினர்.
அம்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட, பாடி ரவுண்டானா அருகில் குளத்தை ஆக்கிரமித்து தனியார் திருமண மண்டபத்தின் காம்பவுன்ட் சுவர் கட்டப்பட்டுள் ளது.அதே போல், திருமண மண்டபத்தின் பின்புறம், மயான புறம்போக்கு நிலத்தில் மூன்று கடைகள் கட்டப்பட்டிருந்தன.இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை, அம்பத்தூர் நகராட்சி ஆணையர் ஆஷிஷ் குமார் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் நேற்று அகற்றினர். ஜே.சி.பி., இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, கடைகள் இடிக்கப்பட்டன.ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக, அம்பத்தூர் உதவிக் கமிஷனர் குமரவேலு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.