தினமணி 30.07.2009
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
மதுரை, ஜூலை 29: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர்.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்ட கடைகளைத் தவிர, வேறு பலர் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். மேலும், வாடகைக் கடைக்காரர்கள் உள்வாடகைக்கு விட்டு, கடைக்கு வெளியே சிறிய பகுதியிலும் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதித்திருந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, பிளாட்பாரம் உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மற்றும் அனுமதியின்றி நடத்தப்பட்ட சுமார் 80 கடைகளை அகற்றினர்.
அகற்றம் செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் கடைகள் வைக்காமல் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.