தினகரன் 16.06.2010
பாடி சிடிஎச் சாலையில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பாடி சிடிஎச் சாலை அருகில் சுடுகாடு, குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் ஜேசிபி மூலம் இடிக்கப்படுகிறது.
ஆவடி, ஜூன் 16: பாடியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது. அங்கிருந்த திருமண மண்டபம், கடைகளை நகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பாடி சிடிஎச் சாலைப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, திருமண மண்டபம், கடைகள் கட்டப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் ஆசிஷ்குமாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, நகரமைப்பு அதிகாரி பாஸ்கரன் தலைமையில் கட்டிட ஆய்வாளர்கள், ஊழியர்கள் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதில், பாடி சுடுகாட்டை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டிருப்பதும், குளம் நிலத்தை ஆக்கிரமித்து திருமண மண்டபம் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
ஜேசிபி இயந்திரங்களை கொண்டு, திருமண மண்டபம், கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.3.5 கோடி மதிப்பிலான 51 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது