தினமணி 18.06.2010
அனுமதியற்ற விளம்பரத் தட்டிகளை அகற்ற மூன்று நாள் கெடு
கோவை, ஜூன் 17: கோவை நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை மூன்று நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று, கோவை மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா கெடு விதித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
கோவையில் ஜூன் 23 முதல் 27-ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள சுவர்களில் வண்ணமயமாக ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
மாநகரின் சில இடங்களில் ஆட்சேபகரமான சுவர் விளம்பரங்களும், அனுமதி பெறாத விளம்பரப் பலகைகளும் அகற்றப்படாமல் உள்ளன. பெரும்பாலான அனுமதியற்ற ஆட்சேபகரமான விளம்பரங்கள் கட்டடங்களின் மேல் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வகையான அனுமதியற்ற விளம்பரங்கள், விளம்பர பலகைகள் ஆகியவற்றை மூன்று தினங்களுக்குள் அதற்கு பொறுப்பாளர்கள் அகற்ற வேண்டும். அனுமதி பெற்றவர்கள் அதன் விவரங்களை எழுதி வைக்க வேண்டும்.
விளம்பர நிறுவனங்கள், வியாபாரிகள், கட்டட உரிமையாளர்கள், அனுமதியற்ற விளம்பரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், பிரதான சாலைகளில் உள்ள அவரவர் வீடு அல்லது நிறுவனங்களின் சுற்றுச்சுவர்களில் வண்ணம் பூசியும், ஓவியங்கள் வரைந்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வரவேற்க தயாராக வேண்டும்.