தினகரன் 21.06.2010
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் திரும்ப இடையூறாக உள்ள கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை
வேலூர், ஜூன் 21: வேலூர் புதிய பஸ் நிலைய பின்புற வாயிலில் பஸ்கள் எளிதாக திரும்பிச் செல்ல இடையூறாக உள்ள பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் விரைவில் இடிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் வாயில் அருகே பயன்பாட்டில் இல்லாத சிறிய கட்டிடம் உள்ளது. முன்பு பழச்சாறு தொழிற்சாலை இருந்தபோது இந்த கட்டிடம் காவலாளி அறையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களுக்கு இந்த கட்டிடம் இடையூறாக உள்ளதால் சிரமப்பட்டு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே இடையூறாக இருக்கும் இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற கலெக்டர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆனால் இந்த கட்டிடம் இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து வேலூர் மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜிடம் கேட்டபோது, ‘பஸ்கள் எளிதாக திரும்பிச் செல்ல பயன்பாட்டில் இல்லாத அந்த கட்டிடத்துக்கு அருகே உள்ள சில மரங்களையும் வெட்ட வேண்டியது உள்ளது. மரங்களை வெட்டி அகற்ற ஏலம் விடப்பட்டு உள்ளது. அதிகாரிகள் அனுமதி அளித்ததும் மரங்களை வெட்டிய பின்னர், விரைவில் அந்த கட்டிடமும் இடிக்கப்படும்‘ என்றார்.