Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ரயில் பாதை அமைக்கும் தனியார் சிமென்ட் ஆலை

Print PDF

தினமணி 31.07.2009

நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ரயில் பாதை அமைக்கும் தனியார் சிமென்ட் ஆலை

அரியலூர், ஜூலை 30: அரியலூர் நகராட்சியின் புதைச் சாக்கடைத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து, அந்த இடத்தில் ரயில் பாதை அமைத்து வருகிறது தனியார் சிமென்ட் ஆலை நிறுவனம்.

அரியலூர் நகராட்சியில் புதைச் சாக்கடைத் திட்டத்தை ஏற்படுத்த ரூ. 25.5 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்படவுள்ளன.

புதைச் சாக்கடைத் திட்டத்துக்காக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அரியலூர் நகராட்சிக்கென கீழப்பழூர் ஊராட்சி எல்லையில் 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

ஆனால், அந்த இடத்துக்கு அருகே அமையவுள்ள தனியார் சிமென்ட் ஆலை, நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனது வசதிக்காக ரயில் பாதை அமைக்கம் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக அதிகாரி எஸ். சமயச்சந்திரன், அந்த தனியார் சிமென்ட் ஆலையின் நிர்வாகத்துக்கு, சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில் பாதைப் பணிகளை உடனே நிறுத்துமாறு அறிவுறுத்தி கடிதம் அனுப்பினார்.

மேலும், இதுதொடர்பாக மறவனூர், பார்ப்பனஞ்சேரி பகுதி மக்கள், ஆண்டிமடம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலருமான எஸ்.எஸ். சிவசங்கர் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

இதையடுத்து, நகராட்சித் தலைவர் செ. விஜயலட்சுமி செல்வராஜன், நிர்வாக அதிகாரி எஸ். சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன், திருமானூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் இரா. கென்னடி ஆகியோருடன் வியாழக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று எம்எல்ஏ சிவசங்கர் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

"வடிகால் செல்லும் நீர் வழிந்தோடியை அடைத்து, நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ரயில் பாதை அமைத்து வரும் தனியார் சிமென்ட் ஆலை தொடர்பாக அரசிடம் தெரியப்படுத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.