தினகரன் 20.07.2010
அகலரயில் பாதை பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம் 38 வீடுகள் இடிப்பு
திண்டிவனம், ஜூலை 20: திண்டிவனத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் கட்டியிருந்த வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அகற்றப்பட்டது.
ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம் வரை 155 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதலாக அகல ரயில்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இப்பணியின் முதற்கட்டமாக இரு வழிப்பாதை அமைப்பதற்கான இடம் சேடன்குட்டையில் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை ஆக்கிரமித்து 38 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இங்கு ரயில்வே பாதை வருவதால் அவர்களை காலி செய்யக்கூறியதோடு, மாற்று இடமாக பல்லாங்குப்பம் சாலையில் பாரதிதாசன் பேட்டையில் 36 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் இரண்டு குடும்பங்களுக்கு மட்டும் இடம் வழங்கப்படவில்லை.
ஆகையால் அந்த இடத்தை காலிசெய்யும் படி ஒவ்வொருக்கும் ரயில்வே துறையினர் நகராட்சி சார்பில் இருமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர்கள் இது வரை அந்த இடத்தை காலி செய்யாததால் ரயில்வே முதன்மை பகுதி பொறியாளர் ஜான்சன், செங்கல்பட்டு ரயில்வே இன்ஸ்பெக்டர் அனில் டேவிட், பகுதி பொறியாளர் நாதன் நாயக் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார், தாசில்தார் வேலாயுதன் பிள்ளை ஆகியோர் முன்னிலையில் மூன்று ஜே.சி.பி மூலம் ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர். அதைத் தொடர்ந்து 38 வீடுகளும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.