தினமணி 21.07.2010
கோபியில் வாடகை கார் நிறுத்துமிடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கோபி, ஜூலை 20: கோபி பஸ் நிலையம் அருகில் வாடகை கார்கள் நிறுத்துமிடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உதவியுடன் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
கோபி பஸ் நிலையம் அருகில் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் செல்லும் இடத்தில் வாடகை கார்கள் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு கார்களை நிறுத்துவதற்கு ஒரு இரும்பு கம்பி போட்டு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதை அமைப்பதற்கு கோபி நகராட்சியிடம் இருந்து அனுமதி பெறவில்லை.
இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது என புகார் கூறி வந்தனர். ஈரோட்டில் நடைபெற்ற குறைதீர் முகாமிலும் மனு கொடுத்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோபி நகராட்சிக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வாடகை கார் நிறுத்துமிடத்தில் போடப்பட்டிருந்த பந்தலை நகராட்சி பணியாளர்கள் உதவியுடன், அதிகாரிகள் அகற்றினர்.
பந்தலை பிரிப்பதற்கு டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் பந்தல் அகற்றப்பட்டது. பஸ் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.