தினகரன் 22.07.2010
அடுத்த மாதம் பணி தொடங்கும் செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு 31ல் இடிப்பு நெடுஞ்சாலை பொறியாளர் உறுதி
செங்கல்பட்டு, ஜூலை 22: செங்கல்பட்டு நகரில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக காலி செய்யும்படி நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அங்கு குடியிருந்தவர்கள் அவகாசம் கேட்டிருந்தனர்.
இதுகுறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நெடுஞ்சாலைத்துறை செங்கல்பட்டு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோட்ட பொறியாளர் லோகநாதன் தலைமை வகித்தார். தாசில்தார் வெங்கடேசன், மின்வாரிய பொறியாளர் மோகன், கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன், செங்கல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாவே காலி செய்து கொள்ள 30ம் தேதி வரை அவகாசம் வழங்குவது, 31ம் தேதி ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ளுவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய லோகநாதன், ‘செங்கல்பட்டு கோட்டத்தில் 2153 கி.மீ. தார்ச்சாலை உள்ளது. மதுராந்தகம், சிங்கப்பெருமாள் கோவில், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் இடிக்கப்படும். நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான சிறு இடத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்றார்.
சாலையோர பெட்டிக்கடை உரிமையாளர்கள், தங்களுடைய கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி தங்களிடம் வாடகை வசூல் செய்தாக அவர்கள் கூறினர். நகராட்சியிடம் வேறு இடம் கேளுங்கள் என்று கூறிவிட்டார். இதனால் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.