தினமணி 29.07.2010
தஞ்சையில் இன்று முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
தஞ்சாவூர், ஜூலை 28: தஞ்சாவூர் நகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தஞ்சாவூர் நகரை மேம்படுத்தவும், பாதசாரிகள் நடைபாதைகளை பயன்படுத்தவும், போக்குவரத்தைச் சீரமைத்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படடு வருகின்றன. இதன் ஒருகட்டமாக, போக்குவரத்து ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வணிகர் சங்க அமைப்புகளையும் அழைத்து, ஆக்கிரமிப்புகளைத் தாங்களாகவே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டத் தலைநகராகவும், பாரம்பரியச் சுற்றுலா மையமாகவும் விளங்கும் தஞ்சாவூர் சிறப்பான நகரமாகும். இதை அழகுபடுத்துவதும், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியதும் அனைவரின் பொறுப்பாகும்.
அனைத்து ஆக்கிரமிப்புகளும் பாரபட்சமின்றி அகற்றப்படும். அகற்றப்படும் பொருள்கள் திரும்பத் தரப்பட மாட்டாது. இந்தப் பணிகளை நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அலுவலர்கள் மேற்கொள்வர். ஆக்கிரமிபபுகள் அகற்றும் பணிக்கு நகரப் பொதுமக்கள், வணிகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.