தினகரன் 29.07.2010
தி.மலை குமரக் கோயில் பகுதியில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தி.மலை, ஜூலை 29: திருவண்ணாமலை குமரக்கோயில் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையின் முக்கிய சாலைகளில் பெருகிவரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் இடையூறு ஏற்படுகின்றன. குறிப்பாக, தேரடித் தெரு, சின்னக்கடைத் தெரு, திருமஞ்சன கோபுரத்தெரு போன்ற முக்கிய சாலைகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும், இந்த சாலைகள் வழியாக போக்குவரத்தும் அனுமதிக்கப்படுகிறது.
சாலையோரங்களில் பல அடி தூரத்துக்கு ஆக்கிரமித்துள்ளதால், சாலையின் அகலம் குறைந்துவிட்டது. மேலும், நடைபாதை கடைகள், சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றால் மேலும் சிக்கல் ஏற்படுகின்றன. இந்நிலையில், நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஈடுபட்டுள்ளது.
அதன்தொடக்கமாக, குமரக்கோயில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர். நகராட்சித் தலைவர் இரா.திருமகன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையாளர் சேகர், பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மேலும், குமரக்கோயில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டது. பெரும்பாலான இடங்களில் கால்வாய்களை மூடிவிட்டு, அதன்மீது கடைகள் வைத்திருந்தனர்.