தினகரன் 29.07.2010
துணை முதல்வர் உத்தரவு பிளக்ஸ் பேனர்கள் திடீர் அகற்றம்
திருப்பூர், ஜூலை 29: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, அவரை வரவேற்று மாநகரில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு அதிரடியாக அகற்றப்பட்டது.
திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, தொகுதி மக்களின் சார்பில் பல்வேறு திட்டங்களை திருப்பூர் தொகுதிக்கு வழங்கிய தமிழக அரசுக்கு வரும் 1ம் தேதி பாராட்டு விழா நடத்துகிறார். இந்த விழா மற்றும் திருமண விழா ஆகிய இரு விழாக்களில் பங்கேற்பதற் காக தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 1ம் தேதி திருப்பூர் வருகிறார். இதையொட்டி மாநகர் முழுவதும் தி.மு.க.வினராக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக துணை முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநகரில் உள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்ற துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 25ம் தேதி தமிழக அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் செல்வராஜ் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து கடந்த இரு தினங்களாக பிளக்ஸ் போர்டு அகற்றும் பணி மும்முரமாக நடந்தது. அலங்கார வளைவுகளும் கணிசமான அளவு அகற்றப்பட்டது. அமைக்கப்பட்ட சில அலங்கார வளைவுகளிலும் புகைப்படங்களையும், வாசகங்களையும் தவிர்த்து தி.மு.க.வின் கொடிகளும், உதயசூரியன் சின்னமும் மட்டுமே அமைக்கப்பட்டது.
திருப்பூரில் துணைமுதல்வர் வருகையை முன்னிட்டு திமுக கட்சியினரால் வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்கள் துணை முதல்வரின் உத்தரவையடுத்து நேற்று அகற்றப்பட்டது.