தினமலர் 29.07.2010
ஸ்டாலின் அறிவுரை திருப்பூரில் பேனர்கள் அகற்றம்
திருப்பூர்:துணை முதல்வர் ஸ்டாலினை வரவேற்று, திருப்பூரில் 15 நாட்களுக்கு மேலாக வைக்கப்பட்டு வந்த பிளக்ஸ் பேனர்களை தி.மு.க.,வினர், தாமாக முன்வந்து அகற்றி வருகின்றனர்.வரும் ஆக., 1ல் திருப்பூரில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி, மாவட்ட தி.மு.க., மற்றும் மாநகர தி.மு.க., சார்பில் 15 நாட்களுக்கு முன்பாகவே, நகரின் பல பகுதிகளிலும், முக்கிய ரோடுகளிலும் தி.மு.க., சார்பில் மெகா அளவிலான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன.முதல்வர் கருணாநிதி படங்களுடன் துணை முதல்வரை வாழ்த்தியும், வரவேற்றும் கட்சி நிர்வாகிகளால் வைக்கப்பட்ட இப்பேனர்களால் முக்கிய ரேடுகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக,"தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இத்தகவல் அறிந்த துணை முதல்வர் ஸ்டாலின், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மேயர் செல்வராஜிடம் போனில் பேசியுள்ளார். அப்போது, ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக பொதுமக்களுக்கு பாதிப்பின்றி விழா நடத்த றிவுறுத்தியுள்ளார்.இதையடுத்து, நகரில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை கடந்த இரு நாட்களாக, திமுகவினர் தாமாக முன்வந்து அகற்றி வருவதை பொதுமக்கள் வரவேற்று பாராட்டினர். பல இடங்களில் கருப்பு சிவப்பு நிறங்களில் அலங்கார வரவேற்பு வளைவுகளை மட்டும் வைத்துள்ளனர்.