தினகரன் 03.08.2010
அனுமதி பெறாத பஸ் நிறுத்தங்களை அகற்றியது மாநகராட்சி
சென்னை, ஆக 3: சென்னையில் அனுமதி பெறாத 377 பேருந்து நிறுத்தங்களை சென்னை மாநகராட்சி நேற்று அதிரடியாக அகற்றியது.
தேனாம்பேட்டை டி.எம்.எஸ் காம்பவுண்ட் அருகில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அகற்றும் பணியினை சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:
முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி சென்னையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளம்பரப்பலகைகள் அகற்றப்பட்டன. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தலைமைச் செயலகம் எதிரிலுள்ள காமராஜர் சாலையிலும் உலகத் தரம் வாய்ந்த பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சென்னை மாநகராட்சியிடம் 377 பேருந்து நிறுத்தங்களை ஒப்படைந்தது.
சென்னையில் 99 பேருந்து நிறுத்தங்கள் அழகுபடுத்தும் பணிக்காக மாநகராட்சி ஒப்பந்தங்கள் கோரியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 விளம்பர நிறுவனத்தால் 377 அனுமதி பெறாத பேருந்து நிறுத்தங்களுக்கு தடை உத்தரவு வாங்கப்பட்டது. இன்று (நேற்று) மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. தனியாரால் சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த 377 அனுமதி பெறாத பேருந்து நிறுத்தங்களை மாநகராட்சி அகற்றியுள்ளது.
தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலை, தாராபூர் டவர் அருகே பல்வேறு இடங்களில் இருந்த அனுமதி பெறாத பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் பேசினார். ஆணையாளர் ராஜேஷ்லக்கானி, மேற்பார்வை பொறியாளர் ஜெ.அட்லி, மண்டல அலுவலர் எதுகுலராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.