தினமலர் 09.08.2010
அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் எந்தவித வசதிகளும் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் கடைக்காரர்கள் தங்கள் "வசதி' மற்றும் செல்வாக் கிற்கு ஏற்ப நகராட்சி அனுமதித்துள்ள இடத்தை விட கூடுதலாக இரண்டு அல்லது மூன்று அடி வரை நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை நீட்டித் துள்ளனர். நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடை போட்டுள்ளனர். கடைக்காரர்கள் போட்டுள்ள மேற்கூரையின் கீழ் பொதுமக்கள் வெயிலுக்கு ஒதுக்கினால் விரட்டி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வெயிலில் காத்திருந்து தான் பஸ் ஏற வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. நகராட்சி அதிகாரிகள் பேருக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வந்து செல்கின்றனர்.மேலும், பொதுமக்கள் உட்கார இருக்கை வசதிகள் இல்லை. இதனால் பஸ்சிற்காக நின்று கொண்டே காத்து கிடக்க வேண்டியுள்ளது. இங்குள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் இல்லை. இலவச கழிப்பறை சுகாதாரக்கேடாக உள்ளது. இரவில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. பஸ் ஸ்டாண்ட் வடக்கு பகுதி இருட்டாக இருப்பதால் "பார்' ஆக செயல்படுகிறது. பல வகைகளில் பொதுமக்களை பாதிக்கும் வகையிலேயே உள்ள பஸ் ஸ்டாண்ட் பஸ்கள் நிறுத்தும் இடமாகத்தான் செயல்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.