தினகரன் 09.08.2010
சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிதம்பரம், ஆக. 9: சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற பலரும் கோரிக்கை விடுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் சிதம்பரத்தில் ஆட்சியர் சீத்தாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் சிதம்பரம் நகர அபிவிருத்தி குழு அமைக்கப்பட்டது. ரூ 4 கோடி செலவில் நகரில் வளர்ச்சி பணிகளை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து நகரின் முக்கிய இடங்களை ஆய்வு செய்த ஆட்சியர் சீத்தாராமன், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதனையடுத்து சில வியா£பாரிகள் தங்களது கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். இந்நிலையில் சிதம்பரம் நகரின் முக்கிய வீதியான மேலவீதியில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
நகராட்சி ஆணையாளர் மாரியப்பன்(பொ), போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன்(பொ) மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. கடைகளின் முன்பு போடப்பட்டிருந்த கொட்டகைகள், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கம்பங்கள் உள்ளிட்டவை பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது. சிதம்பரம் தாசில்தார் காமராஜ் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நேரடியாக பார்வையிட்டார். நகரின் முக்கிய வீதியான மேலவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அந்த வீதி அழகாக காட்சி அளித்தது. மேலும் நடைபாதைகளில் சிரமமின்றி நடந்து செல்லலாம் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.