தினமலர் 11.08.2010
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடரும்! நகராட்சி திட்டவட்டம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சி அதிகாரிகள், நேற்று, முக்கிய சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றியதால், பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், நெடுஞ்சாலைத் துறையினர், சாலைகளிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன், நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக நோட்டீஸ் அனுப்பி, குறிப்பிட்ட தேதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.அதேபோல், நகராட்சியின் முக்கிய சாலைகளான ராஜாஜி சாலை, மேட்டுத்தெரு, பஜார்வீதி, அண்ணாசாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஆகஸ்ட் 9ம் தேதி பகல் 2 மணிக்கு அகற்ற நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். போலீஸ் பாதுகாப்பும் கோரினர். இது குறித்து யாருக்கும் முன்னறிவிப்பு செய்யவில்லை.நேற்று முன்தினம் பகல் 2 மணிக்கு பஸ் நிலையம் நுழைவுச்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நேற்று காலை 11 மணிக்கு, நகரமைப்பு ஆய்வாளர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் அபுபக்கர்சித்திக், பால்டேவிஸ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ராஜாஜி சாலைக்கு ஜே.சி.பி.,யுடன் வந்தனர்.பின், அப்பகுதியில் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற துவங்கினர். கழிவுநீர் கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த கடைகள், கடைகளின் மீது அமைக்கப்பட்டிருந்த பந்தல்களை ஜே.சி.பி., மூலம் அகற்றினர். வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தல் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்றினர்."முன்பே தகவல் சொல்லியிருந்தால் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றியிருப்போம். முன்னறிவிப்பின்றி இடித்து தள்ளி விட்டீர்களே' என வியாபாரிகள் ஆவேசப்பட்டனர்.ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதையொட்டி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மற்ற தெருக்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.