தினகரன் 11.08.2010
திருமுல்லைவாயலில் ஆக்கிரமிப்பு வீடு கடைகள் இடிப்பு
ஆவடி, ஆக. 11: திருமுல்லைவாயல் குளக்கரை சாலையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், கோயில் கட்டப்பட்டிருந்தன. இதனால், இப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர்.
இது குறித்து, ஆவடி நகராட்சி கமிஷனர் ராமமூர்த்திக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின்படி, நகராட்சி அதிகாரிகள் கடந்த வாரம் ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆய்வு செய்தனர். ஆக்கிரமித்த கடை, வீடுகளை அகற்ற கோரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
ஆனாலும் பலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இதையடுத்து, நேற்று காலை நகரமைப்பு அதிகாரி முரளி தலைமையில் கட்டிட ஆய்வாளர்கள் வெங்கடேசன், கவிதா, காமதுரை ஆகியோர் அப்பகுதிக்கு வந்தனர்.
2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடை, வீடு, கோயில் உட்பட 45 கட்டிடங்கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. ஆவடி உதவி கமிஷனர் குப்புசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரியாசுதீன், பால்ராஜ், மாதேஸ்வரன் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.