Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்புகள் நீக்கம்: செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு

Print PDF

தினமணி 11.08.2010

ஆக்கிரமிப்புகள் நீக்கம்: செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு

செங்கல்பட்டு, ஆக. 10: முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டதால் செங்கல்பட்டு ராஜாஜி தெரு பகுதியில் செவ்வாய்க்கிழமை பரபரப்பு நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டன. செங்கல்பட்டு ராஜாஜி தெரு, குடியிருப்பு பகுதியாகவும் வியாபார தலமாகவும் உள்ளது. இப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் உள்ளன. இதனால் தெரு குறுகிப்போய் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை நீக்கும் பணியில் செங்கல்பட்டு நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். கடையின் முகப்புகள், படிகட்டுகள், பெயர்ப் பலகைகள் இடித்து நீக்கப்பட்டன.

இதனால் ராஜாஜி தெரு, மகாதேவன் தெரு உள்ளிட்ட தெருக்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டன. இதனால் அங்குள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. முன்அறிவிப்பு ஏதுமின்றி பரபரப்பான காலை நேரத்தில் ஆக்கிரமிப்புகளை நீக்கும் பணி மேற்கொண்டதால் கடையில் இருந்த பொருள்கள் சேதம் அடைந்ததாக கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். முன்கூட்டியே அறிவிப்பு செய்திருந்தால் நாங்களே பொருள்களை சேதமின்றி அகற்றி இருப்போம் என்றும் கூறினர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளை கேட்டபோது அவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் மெüனம் சாதித்தனர்.

பரபரப்பான சூழ்நிலையைத் தொடர்ந்து அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொருள்கள் வாங்க வந்த சுற்றுப்புற கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதேபோன்று பஜார் வீதி, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு நீக்க இருப்பதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.