தினகரன் 18.08.2010
வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் பிளாட்பார கடைகளை அகற்ற கோரிக்கை
வாலாஜாபாத், ஆக 18: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வாலாஜாபாத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம். செங்கல்பட்டு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் செல்கின்றன. பஸ் நிலையம் அருகே ரயில் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் இருப்பதால் இந்தப் பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். பஸ் நிலைய பிளாட்பாரத்தில் ஏராளமான சிறுகடைகள் முளைத்துள்ளன. பயணிகள் வெயிலில் நிற்கின்றனர். சிறு வியாபாரிகள் ஆங்காங்கே உட்கார்ந்திருப்பதால், பஸ் வரும்போது பயணிகள்சிரமப்படுகின்றனர். பிளாட்பாரத்தில் உள்ள கடைகளின் மீது விழுகின்றனர். இதனால் பயணிகளுக்கும் பிளாட்பார கடை நடத்துபவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பார கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.