தினகரன் 25.08.2010
வைகை கரையோர ஆக்கிரமிப்பு அகற்ற மேயர் உத்தரவு
மதுரை, ஆக. 25: மதுரை வைகை ஆற்றின் கரையோரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் தேன்மொழி உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் தேன்மொழி தலைமை வகித்தார். கமிஷனர் செபாஸ்டின், துணைமேயர் மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொது மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 30க்கு மேற்பட்ட மனுக்களை பெற்ற மேயர் தேன்மொழி கூறுகையில், ‘இம்மனுக்களில் குடிசை வீடுகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றுதல், பாதாள சாக்கடை இணைப்பு வழங்குதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ’என்றார்.
வைகை ஆற்றின் இரு கரையோரங்கலில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மாணிக்கம், தலைமை பொறியாளர் சக்திவேல், நகரமைப்பு அலுவலர் முருகேசன், நகர் நல அலுவலர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர் தேவதாஸ், மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.