தினமலர் 26.08.2010
கலெக்டர் ஆஃபீஸ் சாலையில் ஆக்ரமிப்பு கோவில் அகற்றம்
திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலையில் ஆக்ரமிப்பில் இருந்த இரண்டு கோவில், ஒரு மாதா பீடம் நேற்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மாநகராட்சி அகற்றியது. கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தமிழக முதல்வர் கருணாநிதி வரும் செப்., 8ம் தேதி திறந்து வைக்கிறார். ஏற்கனவே, சாலைகளை ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த வழிபாட்டு தலங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. கலெக்டர் அலுவலக திறப்பு விழாவுக்கு முதல்வர் வருவதால், சாலையோர ஆக்ரமிப்பு வழிபாட்டு தலங்களை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, சங்கம் ஹோட்டல் எதிரே இருந்த விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த மாதா சிலை ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில், அங்கிருந்த மாதா பீடமும் நேற்று அகற்றப்பட்டது. கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே செல்லும் போது, நுழைவு வாயிலில் இருந்த முனீஸ்வரன் கோவிலும் அகற்றப்பட்டது. பிரச்னையை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வழிபாட்டு தலங்கள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.