தினகரன் 26.08.2010
கவுன்சிலர் நாகராஜ் பேட்டி பெங்களூர் மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பு விவர அறிக்கை அடுத்த மாதம் தாக்கல்
பெங்களூர், ஆக. 26: ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி கட்டிடங்களை மீட்பது குறித்து அடுத்த மாதம் மேயருக்கு அறிக்கையளிக்க உள்ளதாக ஆக்கிரமிப்பு அகற்ற கமிட்டியின் தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.
மேயர் எஸ்.கே.நடராஜ் உருவாக்கியுள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. அதன்பிறகு நாகராஜ் கூறியதாவது:
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாநகராட்சி இதுவரை மூன்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. தெற்கு மண்டலத்தில் 40, மேற்கு மண்டலத்தில் 98, கிழக்கு மண்டலத்தில் 62 மாநகராட்சி கட்டிடங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை மாநகராட்சியிடமிருந்து ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ளோர்கள் அந்த ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளாமல் உள்ளனர். எனவே இது சட்டவிரோத ஆக்கிரமிப்பாகவே கணக்கில் கொள்ளப்படும்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் கிடைக்கவில்லை என¢றால் அந்த கட்டிடங்களை மாநகராட்சி மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பின் னி மில்பகுதியில் மாநகராட்சியிடமிருந்து சொந்த பயன்பாட்டுக்காக ஒப்பந்தம்போடப்பட்ட நிறுவனத்தை பிறருக்கு உள்வாடகை கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் வேறு பல கடைகளும் இதேபோல மோசடியாக வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மாநகராட்சியின் முக்கிய சாலைகளிலுள்ள பல மாநகராட்சி கட்டிடங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவோறும் முறையாக லைசென்ஸ்சை புதுப்பித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றும் கமிட்டி அமைக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மோசடிகளையும் வெளிக்கொண்டு வருகிறோம். ஆக்கிரமிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். சில பகுதிகளில் மாநகராட்சி கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து அதில் அனுமதியின்றியே தனியார் பள்ளிகளை ஆரம்பித்து அதிக அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் சம்பவங¢களும் தெரியவந்துள்ளன. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி சொத்துக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒரு அறிக்கை தயாரித்து அடுத்த மாதம் அதை மேயரிடம் அளிக்க உள்ளேன். நில மாபியாக்களின் எந்தவித நெருக்கடிக்கும் நான் அஞ்ச மாட்டேன். மாநகராட்சிக்கு தவறான தகவல்களை அளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும என்றார்.