தினமலர் 03.09.2010
பல கோடி ரூபாய் அரசு நிலம் மீட்பு
சென்னை : வேளச்சேரி பிரதான சாலையில், தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த ஐந்து கிரவுண்ட் அரசு இடம் நேற்று அதிரடியாக மீட்கப்பட்டது.சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான ஐந்து கிரவுண்ட் இடம் உள்ளது. இது, தனியார் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்தது. இந்த இடத்தை காலி செய்யக்கோரி, சி.எம்.டி.ஏ., ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆக்கிரமிப்பாளர் இடத்தை காலி செய்ய மறுத்து, ஐகோர்ட்டுக்குச் சென்றார்.இது தொடர்பான வழக்கில் இடத்தை கைப்பற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர் ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் அப்பீல் செய்தார். ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதை கடந்த 13ம் தேதி, டிவிஷன் பெஞ்ச் உத்தரவை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.இதைத் தொடர்ந்து சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, வேளச்சேரி பிரதான சாலையில் இருந்த ஆக்கிரமிப்பை நேற்று அதிரடியாக அகற்றினர்.சுற்றுச்சுவர்கள், ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன. பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசுக்கு சொந்தமான ஐந்து கிரவுண்ட் இடம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது.