தினமணி 24.09.2010
ஆரணி புதிய பஸ்நிலையத்தில் தாற்காலிகமாக உள்ள பழக்கடைகளை அகற்ற கோரிக்கை
ஆரணி, செப். 23: ஆரணி புதிய பஸ்நிலையத்தில் தாற்காலிகமாக அமைக்கப்பட்ட பழக்கடைகளை அகற்றக்கோரி பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வியாழக்கிழமை நகராட்சி ஆணையாளர் சசிகலாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனு விவரம்: ஆரணி புதிய பஸ்நிலையம் பகுதியில் தெற்கு கோட்டை வீதியில் தாற்காலிகமாக அமைக்கப்பட்ட பழக்கடைகளால் பாதிப்புள்ளாகி இருக்கும் நிரந்தர வியாபாரிகளான நாங்கள் கடந்த 3 மாத காலமாக வியாபாரம் இன்றியும், போதிய வருமானம் இன்றியும் பெரும் பாதிப்புள்ளாகி உள்ளோம்.
ஆரணி காந்திரோடில் சிமெண்ட் சாலை போடும் பணி காரணமாக அங்கிருந்த பழக்கடைகளை தாற்காலிகமாக நகராட்சி சார்பில் புதிய பஸ்நிலையம் தெற்கு கோட்டை வீதியில் அமைத்து கொடுத்தனர். இவர்கள் 3 மாத காலம் மட்டும் இங்கு இருப்பர். பின்னர் பழக்கடைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவோம் என்று நகராட்சி தரப்பில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக எங்களுக்கு வியாபாரம் இல்லாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் நகராட்சி முன்பு விரைவில் உண்ணாவிரதம் மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.