தினமணி 04.10.2010
காலியாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
போடி, ஜூலை 3: போடி நகராட்சி காலனியில் கொலை நடந்த பகுதியில் சமூக விரோதிகள் பதுங்கும் இடமாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
போடி நகராட்சி காலனியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஈஸ்வரன், சுப்பையா ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை போலீஸôர் தேடியதில், நகராட்சி காலனியில் காலியாக இருந்த வீடுகளில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
நகராட்சி காலனியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட பல வீடுகளில் ஆட்கள் வசிக்காமல் காலியாக இருந்தன.
இந்த வீடுகளில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக போலீஸôருக்குத் தெரியவந்தது. இதன்பேரில் போலீஸôர் இந்த வீடுகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில், சனிக்கிழமை இந்த வீடுகளை அப்புறப்படுத்த நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆள்கள் குடியிருக்காமல் காலியாக உள்ள வீடுகள், குடிசைகள், ரோடுகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கூரைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் ரோடுகளில் உள்ள மண் மேடுகளும் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. அப்போது, மின்கம்பம் ஒன்று சேதமடைந்ததால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளையும் அகற்றி விடுவார்கள் எனக்கருதி, நகராட்சி ஆணையரையும், ஜேசிபி வாகனத்தையும் முற்றுகையிட்டனர்.
நகராட்சி ஆணையர் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் பொதுமக்களிடம், குடியிருப்பு வீடுகளை இடிக்கவில்லை என்றும் ஆக்கிரமிப்பு குடிசைகளை மட்டும் அப்புறப்படுத்துவதாகக் கூறியதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.