தினமணி 04.10.2010
தனியார் ஹோட்டலிடம் 50 கோடி நிலம் மீட்பு
தேனாம்பேட்டையில் ஹோட்டலின் வசமிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை பார்வையிடுகிறார் மேயர் மா
. சுப்பிரமணியன். உடன் மாநகராட்சிசென்னை, அக். 3: சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலிடம் இருந்து 50 கோடி மதிப்புள்ள எட்டரை கிரவுண்ட் நிலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
இந்த நிலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய பூங்கா அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அயாத் என்ற தனியார் ஹோட்டலிடமிருந்து மாநகராட்சிக்கு சொந்தமான எட்டரை கிரவுண்ட் நிலத்தை மீட்கும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான நிலங்கள் பல தனியார் நிறுவனங்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.
கடந்த வாரத்தில் எம்.சி.ஆர். நகர், அடையாறு, திருவான்மியூர், ராஜா அண்ணாமலைபுரம், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட 26 இடங்களில் சுமார் 300 கோடி மதிப்பிலான நிலங்கள் மாநகராட்சியால் மீட்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தியாகராய நகர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட 14 இடங்களில் 52 கிரவுண்ட் நிலங்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) மாநகராட்சியால் ஒரே நாளில் மீட்கப்பட்டிருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 200 கோடி ஆகும்.
இந்த நிலையில், தேனாம்பேட்டையில் மாநகராட்சி கையகப்படுத்தியுள்ள 50 கோடி மதிப்பிலான எட்டரை கிரவுண்ட் நிலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பூங்கா அமைக்கப்படும்.
மேலும், சென்னை அண்ணாநகர், அயனாவரம் ஆகிய மண்டலங்களில் உள்ள தனியார் வசமிருக்கும் சென்னை மாநகராட்சிக்குச்
சொந்தமான இடங்களை மீட்பது குறித்த ஆய்வில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்த பணி நிறைவடைந்ததும் அந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கை மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும்.
மழைக்கால நடவடிக்கைகள்: சென்னையில் உள்ள தாழ்வானப் பகுதிகள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றில் மழைநீரை அப்புறப்படுத்த 100 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மழைநீர் வடிகால்வாய்கள் 600 கிலோமீட்டர் நீளத்துக்கு தூர்வாரப்பட்டுள்ளன என்றார் அவர். மாநகராட்சி ஆணையாளர் தா. கார்த்திகேயன், மன்ற உறுப்பினர் கிறிஸ்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.