தினமலர் 08.10.2010
பாப்பாரப்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டியில் போக்குவரத்து இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் கடந்த இரு நாட்களாக அகற்றப்பட்டது.பாப்பாரப்பட்டி நகரில் குறுகிய சாலை வசதிகள் உள்ளது. இந்த சாலையிலும் பெரும் அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக நடைபாதை கடைகள் அதிக அளவில் இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி சிறு விபத்துக்கள் நடந்து வந்தது.
ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து சமீபத்தில் டவுன் பஞ்சாயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து கட்சியும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்நிலையில், நெடுஞ்சாலை துறையினர் டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த இரு நாட்களாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி வருகின்றனர். பென்னாகரம், ரோடு, பாலக்கோடு ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதி ஆகிய இடங்களில் கடந்த இரு நாட்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றினர். இன்றும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடக்கிறது.