தினகரன் 21.10.2010
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
தண்டையார்பேட்டை, அக். 21: வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் 100 நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் ஜவுளிக் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. இங்கு எந்த நேரமும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த சாலையை நடைபாதை வியாபாரிகளும், சிறுவியாபாரிகளும் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சிலர் மாநகராட்சி ஆணையரிடமும், போலீசிலும் மனு கொடுத்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எம்சி ரோடு பகுதியில் பதற்றம் நிலவியது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ராயபுரம் இன்ஸ்பெக்டர் சம்பத், வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோபாலகுரு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த 100 கடைகள் அகற்றப்பட்டன.