தினகரன் 27.10.2010
வீதியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் 41 ஆண்டுக்கு பிறகு நகராட்சி அகற்றியது
பவானி, அக். 27: பவானியில் உள்ள பழனிபுரம் 4 வது வீதியில் சுகாதார சந்து என்ற குறுக்கு வீதி 41 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளது. இந்த வீதியை அப்போதே வீதியின் இருபுறமும் வசித்தவர்கள் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியும் வீடுகளாக மாற்றிக்கட்டியும் ஆக்கிரமித்தனர்.
இது குறித்து தற்போது மாவட்ட நிர்வாகத்துக்கு இது தொடர்பாக புகார்கள் வந்தது. இதையடுத்து மாயமான வீதியை ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் உருவாக்க கலெக்டர் சவுண்டய்யா உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை பவானி நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
நகராட்சி ஆய்வாளர் பேச்சிமுத்து, நகரமைப்பு ஆய்வாளர் (பொறுப்பு) சீனிவாசன் ஆகியோர் தலைமையில் சுகாதார அலுவலர் பாலகுமாரராஜா, ஆர்ஐ சண்முகசுந்தரம் விஏஓ ருத்ரசெல்வன் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றினர். 6 அடி அகலம், 120 அடி நீளத்துக்கு குறுக்கு வீதி மீண்டும் தோன்றியது. ஆக்கிரமிப்பை அகற்றியபோது போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.
குறுக்கு வீதியையே மறந்திருந்த அப்பகுதி மக்கள், இதுவரை முக்கியத் தெருவைச் சென்றடைய சற்று தூரம் சுற்றித்தான் சென்று வந்து கொண்டிருந்தனர்.
தற்போது குறுக்கு வீதி வழியாக நேரடியாக மெயின் தெருவை அடைய முடியும் என்பதால் அப்பகுதி மக்கள், அரசின் நடவடிக்கைக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.