தினகரன் 28.10.2010
ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையான நகரமாக கல்யாண் மாற்றப்படும்
டோம்பிவலி, அக். 28: ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி, வரலாற்று முக்கியத்துவம் வாயந்த கல்யாண்&டோம்பிவலியை தூய்மையான நகரமாக மாற்றுவோம் என்று மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சி தேர்தல் வரும் 31ம் தேதியன்று நடக்கிறது. நாளை பிரசாரம் முடிவடைவதையொட்டி, அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பிரசாரத்துக்காக டோம்பிவலியில் முகாமிட்டிருக்கும் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, நேற்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;
தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், வரலாற்று சிறப்பு மிக்க கல்யாண்&டோம்பிவலியில் தற்போது இருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூய்மையான நகரமாக மாற்றப்படும். இந்நகரம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதிருக்கிறது. ஆனாலும், கல்யாண்&டோம்பிவலியை ஒரு நல்ல நகரமாக மாற்ற வேண்டிய பணிகளுக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இதற்காக, மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வரும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும். எங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளையும் கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து கட்சிகளும் கூறி வருகின்றன. ஆனால் அந்த பிரச்னைகளுக்கு இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை. நாங்கள் எங்கள் வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் கட்சி வெற்றி பெற்றால், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குறுதியும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
மும்பைக்கு அடுத்தப்படியாக தானே மாவட்டத்தில்தான் வெளிமாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 14 லட்சம் வெளி மாநிலத்தவர்கள் தானே மாவட்டத்தில் குடியேறியிருக்கின்றனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை நான் முதலில் விமர்சிக்கவில்லை. அவர் எழுப்பிய கேள்விகளுக்குத்தான் நான் பதில் அளித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.