தினமணி 08.11.2010
சென்னையில் டிஜிட்டல் பேனர்கள்: மேயர் நேரில் பார்வையிட்டு அகற்றினார்
சென்னை, நவ.8: சென்னை கிண்டியில் மேம்பாலம் அருகில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை மேயர் மா.சுப்ரமணியனம் இன்று நேரில் பார்வையிட்டு அகற்றினார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை கட்டடங்களில் புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தி அதில் டிஜிட்டல் பேனர்கள் ஒட்டப்பட்டு, விளம்பரங்கள் மேற்கொள்வதை அகற்ற மாநகராட்சி சார்பில் நேற்று இறுதிக்கெடு விதிக்கப்பட்டு, அகற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இன்று மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் கிண்டி மேம்பாலம் அருகில் உள்ள கட்டடங்களில் ஒட்டப்பட்ட தனியார் விளம்பரங்கள் தார் பூசி அழிக்கப்பட்டன.
இப்பணியினை பார்வையிட்டு மேயர் கூறுகையில், சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, திருவெற்றியூர் நெடுஞ்சாலை என நான்கு பிரதான சாலைகளிலும், 250 பாலங்கள், சுரங்கப்பாதைகளிலும், மாநகராட்சி பூங்காக்கள், கட்டடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கட்டடங்கள் என 3 ஆயிரத்து 464 கட்டடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், சுவர் விளம்பரங்கள் வரைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது புதிய வடிவத்தில் கட்டடங்களில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, டிஜிட்டல் பேனர்கள் ஒட்டப்பட்டு, விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே சென்னை மாநகரின் அழகை சீர்குலைக்கும் அந்த டிஜிட்டல் பேனர்கள் இன்று முதல் சென்னையில் உள்ள 10 மண்டலங்களிலும் அகற்றப்படும் என மேயர் தெரிவித்தார்.