தினகரன் 09.11.2010
மாநகராட்சி அதிரடி நடவடிக்கை தடையை மீறி ஒட்டப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்
சென்னை, நவ.9: சுவர்களில் ஒட்டப்பட்ட டிஜிட்டல் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள், மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று அகற்றினர்.
கிண்டி மேம்பாலம் அருகே தனியார் கட்டிடம் ஒன்றில் ஒட்டியிருந்த டிஜிட்டல் பேனர்களை, மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று தார் பூசி அழித்தனர்.
இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
மெரினா கடற்கரையில் காமராஜர் சாலை, அண்ணாசாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் திருவொற்றியூர் நெடுஞ் சாலையிலும் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், சுவரில் விளம்பரம் எழுதுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநகராட்சி சொந்தமான கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என சுமார் 4 ஆயிரம் கட்டிடங்களிலும் மற்றும் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளிலும் போஸ்டர் ஒட்டவும், விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த இடங்களில் உள்ள கட்டிடங்களில் ஒட்டப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை அகற்ற கெடு முடிந்ததால், அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். சில இடங்களில் பேனர்கள் மீது தார் பூசியும் அழித்து வருகின்றனர்.
தமிழ்நாடு திறந்த வெளி இடங்களில் அழகை கெடுத்தல் தடுப்புச் சட்டம் 1959ன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அபராதமும் விதிக்கப்படும். பேனர்கள் அகற்றப்படுவதற்கான செலவும் கட்டிட உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும். சுமார் 250 இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு மேயர் கூறினார்.