தினகரன் 19.11.2010
மேம்பால பணிக்கு இடையூறு டிசம்பர் 9ம் தேதிக்குள் வழிபாட்டு தலம் அகற்றம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
மணப்பாறை, நவ. 19: மணப்பாறையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக ரயில்வே கேட் மூடப்பட்டு பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. கேட் மூடப்பட்டதையொட்டி பாலப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலையோரம் உள்ள வழிபாட்டு தலங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மணப்பாறை தாலுகா அலுவகத்தில் தாசில்தார் லீலாவதி தலைமையில் மத சம்பந்தபட்ட முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நாசர் முகமது, பாஸ்கர், பவுல் ரத்தினம், பாஜ மாவட்ட துணை தலைவர் குமரவேல், பொன்னுச்சாமி, ராஜா, பிச்சை, செல்வராஜ், சீனிவாசன், சிம்சன், முருகன், குப்புசாமி முக்கிய உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணி, உதவி பொறியாளர் மனோகரன், நகராட்சி ஆணையர் அருணாசலம், வருவாய் ஆய்வாளர் முனுசாமி, சிறப்பு எஸ்ஐ அந்தோணி, அறநிலையத்தறை, மின் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுத்த முடிவின்படி ரங்கவிலாஸ் அருகிலுள்ள விநாயகர் கோயில், பாணி மஸ்தான் தர்கா, புதுத்தெரு விநாயகர்கோயில், மதுரை ரோட்டில் உள்ள பாத்திமா கோயில், சிலுவைத்திண்ணை, விநாயகர்கோயில், கோவில்பட்டி ரோட்டில் உள்ள விநாயகர்கோயில், விராலிமலை ரோடு விநாயகர் கோயில் போன்று சாலையில் போக்குவரத்து இடையூறாக உள்ள மத வழிபாட்டு தலங்களை டிசம்பர் 9ம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் அகற்றி கொள்ள வேண்டும். இல்லையெனில் நெடுஞ்சாலை சார்பில் அவை அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.