தினகரன் 25.11.2010
கண்மாயில் கட்டப்பட்டுள்ள 40வீடுகளை அகற்ற உத்தரவு
மதுரை, நவ.25: திருமங்கலம் அருகே உள்ளது மறவன்குளம். இங்குள்ள கண்மாய் தொடர் மழைக்கு நிறைந்தது. இந்த கண்மாயிலிருந்து நீர் வெளியேறும் கால்வாயில் கக்கன் காலனியில் 40க்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்டி ஆக்கிரமித்திருந்தனர். இதனால் கால்வாய் சுருங்கியது. கண்மாய் நிறைந்து வெளியேறி வெள்ள நீர் கால்வாயில் செல்ல முடியாத நிலையில், நகருக்குள் புகுந்தது. இதனால் தங்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 40வீடுகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட கலெக்டர் காமராஜ், எம்எல்ஏக்கள் மூர்த்தி, லதா அதியமான் உள்பட பலர் சென்றனர். அப்போது தண்ணீர் வெளியேறும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினால்தான் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்றனர். அவர்களிடம் கலெக்டர் பேசுகையில், ‘ஆக்கிரமித்திருப்பதே தவறு. இந்நிலையில் நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமில்லை. ஆக்கிரமிப்பால் பல நூறு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உடனே ஆக்கிரமிப்பிலுள்ள வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
இதையடுத்து திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட நகராட்சிகளிலிருந்து இயந்திரங்கள் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் 40க்கும் அதிகமான ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படுகின்றன