தினமணி 28.08.2009
மல்லாங்கிணறில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காரியாபட்டி, ஆக. 27: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் மெயின் பஜாரில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மல்லாங்கிணறில் மெயின் பஜார், மேலரத வீதி, காந்தி மைதானம் ஆகிய இடங்களில் வியாபாரிகள் ஆக்கிரமித்திருந்தனர். இதை சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
மீண்டும் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆட்சியருக்கும், பேரூராட்சி நிர்வாகத்துக்கும் பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், ஆட்சியரின் உத்தரவுப்படி நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சி ஆகியவை இணைந்து மல்லாங்கிணறு மெயின் பஜார், மேலரத வீதி, காந்தி மைதானம் ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினர்.
மல்லாங்கிணறு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.