Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 80 சிறிய கடைகள் அகற்றப்பட்டன

Print PDF

தினகரன்               02.12.2010

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 80 சிறிய கடைகள் அகற்றப்பட்டன

புதுடெல்லி, டிச.2: அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 80 சிறிய கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். கிழக்கு டெல்லி லட்சுமி நகர் லலிதா பார்க் அருகே கடந்த 15ம் தேதி 5 மாடிக் கட்டிடம் இடிந்து 70 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஆபத்தான கட்டிடங்களை கண்டறிந்து அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அத்துடன் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களையும் போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி இடித்து வருகிறது.

சிவில் லைன் பகுதியில் மட்டும் ஏற்கனவே அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 16 கட்டிடங்களை மாநகராட்சி இடித்துள்ளது. அங்கு மேலும் 9 வீடுகள் அனுமதி இல்லாமலும் அனுமதியை மீறியும் கட்டப்பட்டு இருந்தன. அந்த கட்டிடங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன் தினம் இடித்தனர். மத்திய டெல்லியில் உள்ள ஆசாத் மார்க்கெட்டை சுற்றிலும் புற்றீசல்போல ஏராளமான கடைகள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருந்தன. அந்த கடைகளையும் அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது.

மார்க்கெட்டைச் சுற்றி வியாபாரம் செய்து கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் வியாபாரிகள் தங்களின் வசதிக்கு ஏற்ப சிறிய மற்றும் பெரிய கட்டிடங்களை கட்டி இருக்கின்றனர். இதனால் ராணி ஜான்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளின் வருமானமும் கணிசமாக குறைகிறது.

எனவே அந்த இடத்தில் ஒரு மேம்பாலம் கட்ட அரசு தீர்மானித்துள்ளது. இதனால் அங்கே இருக்கும் சிறிய கடைகளை அப்புறப்படுத்த அரசு தீர்மானித்து. அதன்படி போலீசாரின் உதவியுடன் ஆசாத் மார்க்கெட்டை சுற்றிலும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருந்த சிறிய கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன் தினம் இடித்து தள்ளினார்கள்.

இதுபற்றி மாநகராட்சி கட்டிட அனுமதி பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘ஆசாத் மார்க்கெட்டை சுற்றி இருக்கும் சிறிய கடைக்காரர்கள் காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் அவர்கள் எதையும் சட்டை செய்யாமல் இருந்தனர். எனவே மாநகராட்சியின் இடத்தை கைப்பற்ற சிறிய கடைகளை அகற்றினோம்என்றார்.